Add parallel Print Page Options

தீருவைப்பற்றிய துக்கச் செய்தி

26 பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமைப்பற்றி தீரு கெட்டவற்றைச் சொன்னது: ‘ஆ, ஆ! ஜனங்களைப் பாதுகாக்கிற நகரவாசல் அழிக்கப்பட்டது! நகரவாசல் எனக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நகரம் (எருசலேம்) அழிக்கப்படுகிறது எனவே அதிலிருந்து எனக்கு ஏராளமான விலைமதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்!’”

ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கடற்கரை அலைகளைப்போன்று வருவார்கள்.”

தேவன் சொன்னார்: “அந்தப் பகைவீரர்கள் தீருவின் சுவர்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடித்துத் தள்ளுவார்கள், நானும் அந்நாட்டின் மேல் மண்ணைத் துடைப்பேன். தீருவை வெறும் பாறையைப்போன்று ஆக்குவேன். தீருவானது மீன் பிடிப்பதற்கான வலைகள் விரித்து வைப்பதற்குரிய இடமாக ஆகும். நான் இதைச் சொன்னேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு, போரில் வீரர்கள் எடுக்கத்தக்கதான விலைமதிப்புள்ள பொருளாகும். அவளது மகள்கள் (சிறு நகரங்கள்), முக்கிய பிராதான நிலத்தில் போரில் கொல்லப்படுவார்கள். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்று அறிவார்கள்.”

தீருவை நேபுகாத்நேச்சார் தாக்குவான்

எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் தீருவுக்கு விரோதமாக வடக்கிலிருந்து பகைவரை வரவழைப்பேன். அப்பகைவன், பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார்! அவன் பெரும்படையைக் கொண்டுவருவான். அதில் குதிரைகள், இரதங்கள், குதிரை வீரர்கள், மற்றும் ஏராளமான வீரர்களும் இருப்பார்கள்! அவ்வீரர்கள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள். நேபுகாத்நேச்சார் உனது முக்கியமான நிலத்திலுள்ள மகள்களை (சிறு நகரங்களை) கொல்வான். உன் பட்டணத்தைத் தாக்க அவன் கோபுரங்களைக் கட்டுவான். உன் நகரைச் சுற்றி மண் பாதை போடுவான். அவன் மதில் சுவர்வரை போகும் வழிகளை அமைப்பான். உனது சுவர்களை இடிக்க பெருந்தடிகளைக் கொண்டுவருவான். அவன் கடப்பாரைகளைப் பயன்படுத்தி உனது கோபுரங்களை இடிப்பான். 10 அங்கு ஏராளமாக குதிரைகள் இருக்கும். அவற்றிலுள்ள புழுதி உன்னை மூடும். குதிரை வீரர்கள், வாகனங்கள், இரதங்கள் ஆகியவற்றுடன் பாபிலோன் அரசன் நகர வாசல் வழியாக நுழையும்போது எழும் சத்தத்தால் உன் சுவர்கள் நடுங்கும், ஆம், அவர்கள் உன் நகரத்திற்குள்ளே வருவார்கள். ஏனென்றால், அதன் சுவர்கள் இடித்துத் தள்ளப்படும். 11 பாபிலோன் அரசன் நகரவாசல் வழியாக நகரத்திற்குள் சவாரி செய்து வருவான். அவனது குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளை எல்லாம் மிதிப்பான். அவன் உன் ஜனங்களை வாள்களால் கொல்லுவான். உன் நகரில் உள்ள பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 உனது செல்வங்களை நேபுகாத்நேச்சாரின் ஆட்கள் எடுத்துக்கொள்வார்கள். நீ விற்க விரும்புகிற பொருட்களை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உன் சுவர்களை உடைத்தெறிவார்கள், கல்லாலும் மரத்தாலுமான இன்பமான வீடுகளை அழித்துக் குப்பையைப்போன்று கடலில் எறிவார்கள். 13 எனவே, நான் உனது மகிழ்ச்சியான பாடல் ஒலியை நிறுத்துவேன். ஜனங்கள் உனது சுரமண்டல ஒலியை இனிக் கேட்கமாட்டார்கள். 14 நான் உன்னை வெறுமையான பாறையாக்குவேன். நீ மீன் பிடிக்கும் வலையைப் பரப்புவதற்குரிய இடமாவாய்! நீ மீண்டும் கட்டப்படமாட்டாய். ஏனென்றால், கர்த்தராகிய நான் பேசினேன்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

பிற நாடுகள் தீருக்காக அழும்

15 எனது கர்த்தராகிய ஆண்டவர் தீருக்கு இதைக் கூறுகிறார்: “மத்தியதரை கடலோரங்களிலுள்ள நகரங்கள் எல்லாம் நீ விழுகிற சப்தம் கேட்டு நடுங்கும். உன் ஜனங்கள் காயமும் மரணமும் அடையும்போது இது நிகழும். 16 பிறகு அந்நாடுகளில் உள்ள தலைவர்கள் தம் சிங்காசனத்தை விட்டு இறங்கி தம் துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தம் சிறப்பிற்குரிய ஆடைகளை அகற்றிவிடுவார்கள். அவர்கள் தம் அழகான ஆடைகளை அகற்றுவார்கள். பிறகு அவர்கள் தம் நடுக்கமாகிய ஆடையை (பயம்) அணிந்துகொள்வார்கள். அவர்கள் தரையில் அமர்ந்து அச்சத்தால் நடுங்குவார்கள். நீ இவ்வளவு விரைவாக அழிக்கப்பட்டதை எண்ணி அவர்கள் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னைப்பற்றி இச்சோகப் பாடலைப் பாடுவார்கள்:

“‘ஓ தீருவே, நீ புகழ்பெற்ற நகரமாக இருந்தாய்.
    ஜனங்கள் உன்னிடம் வாழக் கடல் கடந்து வந்தனர்.
நீ புகழோடு இருந்தாய்.
    இப்போது நீ போய்விட்டாய்!
கடலில் நீ பலத்தோடு இருந்தாய்.
    உன்னில் வாழ்பவர்களும் அப்படியே இருந்தார்கள்.
முக்கிய நிலத்தில் வாழ்பவர்களையெல்லாம் பயமுறுத்தினாய்.
18 இப்பொழுது நீ விழும் நாளில்
    தீவுகளில் உள்ள நாடுகள் அச்சத்தால் நடுங்குகின்றன.
நீ பல குடியிருப்புக் கூட்டங்களைக் கடலோரமாகத் தொடங்கினாய்.
    இப்பொழுது, நீ வீழ்ச்சியடையும் அன்று கடலோர நாடுகள் அச்சத்தால் நடுங்குவார்கள்.’”

19 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “தீரு, நான் உன்னை அழிப்பேன். நீ ஒரு பழைய வெறுமையான நகரமாவாய். அங்கு எவரும் வாழமாட்டார்கள். கடல் பொங்கி உன்மேல் பாயும்படி செய்வேன். பெருங்கடல் உன்னை மூடிவிடும். 20 நான் உன்னை மரித்த மனிதர்கள் இருக்கின்ற ஆழமான பாதாளத்திற்கு அனுப்புவேன். நீ நீண்ட காலத்திற்கு முன்னால் மரித்தவர்களோடு சேர்வாய். நீ குடியேறாமல் இருக்கும்படி தொடக்க காலம் முதல் பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடு நான் உன்னைத் தங்கச் செய்வேன். பிறகு உன்னில் எவரும் வாழமாட்டார்கள். உயிர்கள் வாழும் இடத்தில் நீ இருக்கமாட்டாய்! 21 பிற ஜனங்கள் உனக்கு ஏற்பட்டதைப் பார்த்து அஞ்சுவார்கள். நீ முடிந்துபோவாய். ஜனங்கள் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன்னை மீண்டும் காணமாட்டார்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் சொல்வது இதுதான்.