Add parallel Print Page Options

வாழ்வதற்கேற்ற சரியான வழி

கீழ்க்கண்டவற்றைச் செய்ய நினைவில் வைக்கும்படி மக்களிடம் சொல். ஆள்வோரின் அதிகாரிகளுக்கும் அரசு அலுவலகர்களுக்கும் அடங்கி இருக்கவும், நன்மை செய்யத் தயாராக இருக்கவும், யாருக்கும் எதிராகத் தீமையைப் பேசாமல் இருக்கவும், கீழ்ப்படியவும், மற்றவர்களோடு சமாதானமாகவும், மென்மையாகவும் எல்லா மனிதர்களிடமும் மரியாதை காட்டவும் இதனை விசுவாசிகளிடம் கூறு.

கடந்த காலத்தில் நாமும் முட்டாளாக இருந்தோம். நம்மிடம் கீழ்ப்படிதல் இல்லை. தவறுகிறவர்களாக நாம் இருந்தோம். பலவித ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடந்தோம். தீயவற்றைச் செய்து, பொறாமையோடு வாழ்ந்தோம். மக்கள் நம்மை வெறுத்தார்கள். நாமும் ஒருவரையொருவர் வெறுத்தோம். ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன. தேவனுடன் சரியான வகையில் இருக்கும்பொருட்டு நாம் செய்த எந்த நல்ல செயல்களாலும் இரட்சிக்கப்படவில்லை. அவருடைய கிருபையால் நாம் இரட்சிக்கப்பட்டோம். நம்மைப் புதிய மனிதர்களாக்கும் சுத்திகரிப்பின் மூலமும், பரிசுத்த ஆவியின் புதுப்பிக்கும் வல்லமை மூலமும், அவர் இரட்சித்தார். அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அந்தப் பரிசுத்த ஆவியை நம் மீது முழுமையாகப் பொழிந்தார். தேவனது கிருபையால் நாம் அவரோடு நீதிமான்களானோம். தேவன் நமக்கு ஆவியைக் கொடுத்தார். அதனால் நாம் நித்திய வாழ்வைப் பெறமுடியும். அதுவே நாம் நம்பிக்கொண்டிருப்பதும் ஆகும். இந்தப் போதனை உண்மையானது.

மக்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது தேவனை நம்பும் மக்கள் தம் வாழ்வை நன்மை செய்வதற்குப் பயன்படுத்த எச்சரிக்கையாக இருப்பர். இவை நல்லவை, எல்லா மக்களுக்கும் பயன் உள்ளவை.

முட்டாள்தனமாக வாக்குவாதம் செய்வோர், பயனற்ற குடும்பக் கதைகளைப் பேசுவோர், சண்டைகளைத் தூண்டி விடுவோர், மோசேயின் சட்டங்களைக் குறித்து வாக்குவாதம் செய்வோர் ஆகியோரிடமிருந்து விலகி இரு. அவை எதற்கும் பயனற்றவை, யாருக்கும் உதவாதவை. 10 எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு. 11 ஏனென்றால் இப்படிப்பட்ட ஒருவன் நிலை தவறி, பாவம் செய்கிறவனாக இருக்கிறான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். இவனது பாவங்களே இவன் தவறானவன் என்பதை நிரூபிக்கிறது.

நினைவில் வைக்கவேண்டியவை

12 நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன். 13 வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய். 14 நன்மை செய்வதற்குரியதாகத் தம் வாழ்வைப் பயன்படுத்தும்படி நம் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவையானவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். பிறகு அவர்களின் வாழ்வு பயனற்றதாக இருக்காது.

15 என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு.

உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.